திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடியே 84 லட்சம் மதிப்பில் புதிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது.
ஊரக வளர்ச்சி அலுவலகம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிற துறையாக ஊரக வளர்ச்சித்துறை உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் அதிக பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அலுவலகங்களில் இடவசதி சற்று குறைவாக இருந்து வந்தது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடியே 84 லட்சம் மதிப்பில் புதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.
28 ஆயிரம் சதுர அடி
தரை தளம் மற்றும் முதல் தளம் என 28 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகங்கள், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி தணிக்கை துறை அலுவலகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்க உள்ளன.
அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களும் ஒரே கட்டிடத்தில் இயங்குவதன் காரணமாக நிர்வாக ரீதியாகவும், பொதுமக்கள் எளிதாக அணுகவும் பயன் உள்ளதாக அமையும். இந்த அலுவலக கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.