விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் தினந்தோறும் காலை விருத்தாசலம் பாலக்கரையில் வேலைக்கு செல்ல காத்திருப்பார்கள். அவர்களை கட்டிட உரிமையாளர்கள், மேஸ்திரிகள் வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்தநிலையில், நேற்று காலை பாலக்கரை பகுதியில் வழக்கம்போல் கட்டிட தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கட்டிட தொழிலாளர்களிடம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாலக்கரையில் இருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள காலி இடத்தில் நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளர்கள் போலீசாரை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.