சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை - சேலம் பசுமைச் சாலைக்காக 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் உட்பட மொத்தம் 1900 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்திற்காக தேவைப்படுவதாகவும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும்.
புறம்போக்கு நிலங்கள் தவிர 1500 ஹெக்டேர் நிலங்கள், அதாவது 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் என்பதால் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதையும் இழந்து வாழ்வாதாரமற்றவர்களாக மாறுவார்கள். மொத்தம் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு வனப்பகுதிகள் சீரழிக்கப்படும். இதனால் மக்களுக்கும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை யாராலும், எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது.
இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.