தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனை

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது.

இதனிடையே, நேற்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT