சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 131 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் 20 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 191 பேருக்கும், காஞ்சிபுத்தில் 98 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக இன்று ராமநாதபுரத்தில் 140 பேருக்கும், மதுரையில் 204 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 694 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 2,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 30,064 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.