எடப்பாடி,
கனமழை
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, வெள்ளரி வெள்ளி, பூலாம்பட்டி, காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக காவிரி பாசன பகுதிகளில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேவூர்
தேவூர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையினால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை கரும்பு பயிர்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் நெல் பயிர்களை தண்ணீர் முழ்கடித்து வயல் வரப்புகள் ஆங்காங்கே உடைத்து சென்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.