தமிழக செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகையில் ரூ.65 லட்சம் கையாடல்; 3 பேருக்கு சிறை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

விவசாய பயிர் காப்பீட்டு தொகையில் ரூ.65 லட்சம் கையாடல் செய்த இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பணம் கையாடல்

மத்திய அரசு நிறுவனமான இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். 2009-ம் ஆண்டு விவசாயிகள் பலர் பிரீமியம் தொகையை வரைவோலை மூலம் செலுத்தினார்கள்.

காப்பீட்டு நிறுவனத்தில் எழுத்தராக வேலை செய்த ஜி.சக்கரபாணி அந்த வரைவோலைகளை கையாடல் செய்தார். போலி ஆவணங் கள் மூலம் வங்கியில் கணக்குகளை தொடங்கி அந்த வரைவோலைகளை பணமாக மாற்றிக்கொண்டார். அவருக்கு கல்யாணசுந்தரம், சாலை குணதங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

3 பேருக்கு சிறை

இவர்கள் 3 பேரும் சேர்ந்து சுமார் ரூ.65 லட்சத்தை கையாடல் செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து இந்திய பயிர் காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் அன்பரசு சி.பி.ஐ. போலீசில் புகார் செய்தார். சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரபாணி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்துவந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஜவகர், சக்கரபாணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், சாலை குணதங்கத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18 ஆயிரம் அபராதமும், கல்யாண சுந்தரத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.