சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக வளாகங்களில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறிகள் கடைகள் இயங்க அனுமதியில்லை. இதர மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத வாடிக்கையாளாகளைக் கொண்டு இயக்க வேண்டும். மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.
அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் இயக்கும் அனைத்துக் கடைகளும் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 முதல் நண்பகல் 12 மணி என வரையறை செய்ததுடன், இந்தக் கால அளவு வரும் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தலைமைச் செயலா ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய ஊரடங்கு எதிரொலியால் மதுபானக் கடைகளில் கூட்டம் இன்று அலை மோதியது. பை, பெட்டிகள் நிறைய மதுவகைகளை வாங்கி சென்றனர். வெளிநாட்டு மதுபானம் விற்கும் கடைகளிலும் கூட்டம் நிரம்பியது. முன்னதாக நேற்றுவரையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் கடைகள் மூலமாக தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.90 கோடி அளவுக்கும், மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவும் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக தமிழக அரசுக்கு மிகப் பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்போது கடைகள் மூடாமல் நேரத்தை மட்டும் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.