சென்னை,
கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.