புதுடெல்லி
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கினார்கள். புயலினால் உயிரிழந்த சிலரது உடல்கள் கேரள கடலோரத்தில் ஒதுங்கின. சில மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓகி புயலைத் தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, விமானப் படை இணைந்து டிசம்பர் 20-ந் தேதி வரை மொத்தம் 821 பேரை மீட்டுள்ளன. வர்த்தக கப்பல்கள் உள்ளிட்டவைகள் மூலமாக 24 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 453; கேரளாவில் 362; லட்சத்தீவில் 30 பேர் என மொத்தம் 845 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் மாநில அரசு தெரிவித்துள்ள தகவல்களின் படி டிசம்பர் 15-ந் தேதி வரை தமிழகத்தில் 400; ,கேரளாவில் 261 பேர் என மொத்தம் 661 மீனவர்களை காணவில்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.