அந்தியூர்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்தது.
நீர்மட்டம் உயர்வு
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இதன் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. 42.50 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வரட்டுப்பள்ளம், கல்லுபள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக 84 கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26.85 அடியாக இருந்தது. தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரம் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குட்டைகள் நிரம்பின
கோடை காலத்தில் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியே வரும். ஆனால் கடந்த 4 நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.