பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஓரப்பம் ஊராட்சி மருதேப்பள்ளியில் கடந்த மாதம் 29-ந் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவை காண ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது விழாவை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்த கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான காந்தி (வயது 40) என்பவரின் மார்பு பகுதியில் ஒரு காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவரை விழாக்குழுவினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காந்தி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளை முட்டியதில் காயம் அடைந்து இறந்த காந்திக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.