சென்னை,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 8க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக அறிகிறேன். காட்டுத்தீயில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை விரைவில் மீட்டுள்ளனர்.
இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை நன்றியோடு வாழ்த்துகிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்கள் நலம்பெற எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.