தமிழக செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த நிலையில், தற்போது மறைந்துள்ளார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று அதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். 

SCROLL FOR NEXT