தமிழக செய்திகள்

முடிந்தது அதி கனமழை...! கரை கடந்த தாழ்வு மண்டலம் ...! சிகப்பு எச்சரிக்கை வாபஸ்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.

சென்னை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.

தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசியது.

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பால்சந்திரன் கூறியதாவது;-

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும். அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கரையை கடந்து வருகிறது.

இன்று காலை 8.30 மணியிலிருந்து தற்போது வரையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 63 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை முழுவதுமாக கடந்து செல்ல 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும்.

சென்னை பெருநகரில் விட்டு,விட்டு, கனமழை முதல் மிக கனமழை வரையில் தொடரும்.

சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான ரெட் அலர்ட் விலக்கப்படுகிறது.

இருப்பினும், சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யும் என கூறினார்.