சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜும்தார் கட்டுரை எழுதியிருந்தார். அதில், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, நவம்பர் 8-ம் தேதி, சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.