தமிழக செய்திகள்

பாஜகவின் முகத்திரை விலக்கிய டெல்லி நீதிமன்ற தீர்ப்பு - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பாஜகவின் அரசியல் பழி வாங்கும் வன்முகத்தை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு திரை விலக்கிக் காட்டியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு, மதுபானங்கள் விற்பனையில் கூடுதல் வருவாய் திரட்டும் வகையில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதனடிப்படையில் மதுபானங்கள் தனியார் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி பாஜக மத்திய அரசு, அமலாக்கத்துறை மற்றும் மத்தியப் புலானாய்வுத்துறை ஆகிய அமைப்புகள் மீது சோதனைகள், வழக்குகள் பதிவு, முதல்-அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்-அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பிற பகுதிகளில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மீது பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பலவேறு சட்டப் பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்து மிரட்டப்பட்டனர் .

கடந்த 2024 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், முதல்-அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்தது. அவர் தேர்தல் பரப்புரை செய்வதிலிருந்து தடுக்கும், மத்திய அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து கிளர்ச்சிகளும் நடைபெற்றன.

இரண்டு, மூன்றாண்டுகளாக டெல்லி நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், “டெல்லி அரசு மதுபானக் கொள்கை வகுத்ததில் சதியோ, குற்றவியல் நோக்கமோ இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை” என கூறி, வழக்கு தள்ளுபடி செய்துள்ளது.

இதனடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி பொதுச் செயலாளர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிஷ்சோடியா உள்ளிட்ட

21 பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசியலமைப்பு அரசு அதிகாரம் பெற்ற அமைப்புகளை, பாஜகவினர் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக தரம் தாழ்த்தி வருவதாக நாடு முழுவதும் எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியலை தோலுரித்து காட்டியுள்ளதுடன், எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் அதன் வன்மத் தாக்குதல் நடத்தி வரும் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ள டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

சட்டப் போராட்டத்தின் மூலம் பாஜகவின் பழிவாங்கும் அரசியலை படுதோல்வி காணச் செய்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், விடுதலை பெற்றுள்ள அதன் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிஷ்சோடியோ உள்ளிட்டோருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.