தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு குதிரை பேரம்: கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை பா.ஜனதா மீது வைகோ குற்றச்சாட்டு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைகோவுக்கு ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நான் பதவி ஏற்றபோது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியும் வரவேற்றது நெகழ்ச்சியை தந்தது. அவரை கடுமையாக விமர்சித்தவன் நான். ஆனால் அவர் மேஜையை தட்டி வரவேற்பார் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடியூரப்பா பதவி ஏற்கிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு கோடி கணக்கில் குதிரை பேரத்தை நடத்திய பா.ஜ.க. எத்தனை நாட்களுக்கு எடியூரப்பா அரசை காப்பாற்றும். குதிரை பேரம் நடத்துவது, ஜனநாயக படுகொலை செய்வது என்று செயல்படும் பா.ஜ.க. ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கான அருகதையை இழந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.