திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர், தமிழக முதல்-அமைச்சர், மாநில மனித உரிமைகள் ஆணையம், மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர், பெண் இன்ஸ்பெக்டருடன் உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையின் வாட்ஸ்அப் குழுவில் பரவியது. அதன்பிறகு சில வினாடிகளில் அந்த ஆபாச புகைப்படம் வாட்ஸ்அப் குழுவில் இருந்து அழிக்கப்பட்டது.
தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துணை சூப்பிரண்டு மீது ஏற்கனவே உயர்அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், புகாருக்குள்ளான துணை சூப்பிரண்டு பெண் போலீசார் பலருக்கு தவறான நோக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.
அதேநேரம் சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவில் அவர் தன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் பார்த்து கொள்கிறார். ஆகவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.