தமிழக செய்திகள்

மதுப் பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கண்டித்ததால் விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்த தூத்துக்குடியை சேர்ந்த கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகேயுள்ள ஊத்துப்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (35). இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கலைச்செல்வனுக்கு மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மே 6-ஆம் தேதி கலைச்செல்வன் மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சாந்தி, குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கலைச்செல்வன், வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் கதவை உடைத்து அவரை மீட்டு, உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வன், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.