தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீஸ் ‘ஆர்டர்லி’களை காவல் பணிக்கு அனுப்ப டி.ஜி.பி. உத்தரவு

தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் பேர் ‘ஆர்டர்லி’யாக இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது.

சென்னை,

தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில், வீட்டு வேலை ஆட்களாக ஆர்டர்லி போலீசார் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு காவல்துறை உயர் அதிகாரியும் தங்களின் வீடுகளில் 5 முதல் 20 போலீசார் வரை ஆர்டர்லியாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் பேர் ஆர்டர்லியாக இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்தநிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) அபய்குமார் சிங், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சிறப்பு பிரிவு தலைவர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பினார். அதில், போலீஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற்று, காவல் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். டி.ஜி.பி.யின் இந்த நடவடிக்கை காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.