சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்வதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர்மின்கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 2013-ம்ஆண்டு புதியநில எடுப்புச்சட்டப்படி, சந்தைமதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, உயர்மின்கோபுரம் அமைத்திட கையப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரத்திற்கு இழப்பீடு தராததால், மன உளைச்சல் அடைந்த 75 வயது விவசாயி ராமசாமி, காங்கேயம் அருகே உயர்மின்அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரியவந்துள்ளது.
விவசாயி ராமசாமி இறப்பிற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அக்குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி, உரியமுறையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்தொற்றுமையை உருவாக்கி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.