சென்னை,
சட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 20-ம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்தாண்டு 2019 முதல் நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றின் கரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் இணையவழி வாயிலாகவே நடத்தியது.
இதனால் இக்கல்வியாண்டின் முதலாம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதுபோல் இணையவழியில் நடத்தப்படுமா என்ற ஐயம் மாணவர் தரப்பில் எழுகின்றது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அவர்கள் அளித்த தெளிவுரையில், தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்து பயிற்று வகுப்புகளும் நேரடி வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், சட்டக் கல்வியின் தரத்தினை பேணும் வகையில் பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் இனி நேரடித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என்றும் அத்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதியில் தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் நேரடித் தேர்வாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.