சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று (12.04.2026) வாக்காளர் தகவல் சீட்டு (VIS) அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக விநியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 13,95,716 ஆண் வாக்காளர்கள், 14,96,921 பெண் வாக்காளர்கள் மற்றும் 868 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் 975 இடங்களில் அமைக்கப்பட்டுள் 4,085 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று (12.04.2026) முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டு (VIS) அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வாறாக, இன்று (12.04.2026) ராயபுரம், எழும்பூர் உள்ளிட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கினர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.