குடியாத்தத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலுவிஜயன் தொடங்கிவைத்தனர்.
கபடி போட்டி
வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு சீவூர் பெரிய தனக்காரர்கள், ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கினார்கள். காளியம்மன் அறக்கட்டளை, சீவுர் இளைஞர் அணியினர், விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்தனர். ஒன்றியகுழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் நத்தம் பிரதீஷ், எஸ்.முரளிதரன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஏகாம்பரம், ஒன்றியகுழு உறுப்பினர் மனோகரன், தி.மு.க. பேச்சாளர் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கபடி போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
80 அணிகள் பங்கேற்பு
இந்தப் போட்டிகளில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் என மொத்தம் 80 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட கபடி கழக தலைவர் சீவூர் சேட்டு, மாவட்ட தலைவர் பூஞ்சோலை சீனிவாசன், சர்வதேச கபடி நடுவர் பி.கோபாலன், ஆசிய வலுதூக்கும் வீரர் சீ.மூர்த்தி யூ.லிங்கம் கே.எஸ்.பாபு உள்பட விழாவுக்கு குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.