சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியாக நடைபெறும். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.