தமிழக செய்திகள்

பகல் கனவாகவே முடியும்: தி.மு.க. ஆட்சிக்கு வருவதாக இன்ப கனவு காண்கிறார் - தி.மு.க. உறுப்பினருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

தி.மு.க. ஆட்சிக்கு வருவதாக அக்கட்சி உறுப்பினர் தங்கம் தென்னரசு இன்ப கனவு காண்கிறார், அது பகல் கனவாகவே முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் தங்கம் தென்னரசு:- காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தி.மு.க. ஆட்சியில் ரூ.175 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. உங்கள் (அ.தி.மு.க.) ஆட்சியில் இந்த திட்டத்தை மூன்றாக பிரித்தீர்கள். அதில் ஒன்று காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். மத்திய அரசு நிதியில் இந்த பணி நடக்கிறதா?. மாநில அரசு நிதியில் நடக்கிறதா?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் மத்திய அரசு எடுத்தது. ஆனால், மத்திய அரசு இந்த பணியை எடுத்தால் காலதாமதமாகும் என்று, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாநில அரசே எடுத்துச் செய்வதாக அறிவித்தார். இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினர் தங்கம் தென்னரசு:- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது. அதன் முழு கொள்ளளவான 152 அடி நீரை நிரப்பும் அளவுக்கு அணையை பலப்படுத்த வேண்டும். பேபி அணை முன்பு 23 மரங்கள் உள்ளன. அந்த மரங்கள்தான் வளர்கிறதே தவிர, அணை வளரவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக கொண்டு வந்ததே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அங்குள்ள 23 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதில், 2, 3 மரங்களை வெட்டியபோது, தமிழக அதிகாரிகள் மீது வழக்கு போட்டனர். கட்டுமான பொருட்களை கொண்டு செல்லக்கூட கேரளா அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு முடிந்ததும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.

உறுப்பினர் தங்கம் தென்னரசு:- அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆனால், கேரளா அரசு இடுக்கி பேக்கேஜ் என்ற திட்டத்தை அறிவித்து 6 இடங்களில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதனால், 2 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு வருவது பாதிக்கப்படும். இந்த அணைகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.

பாசனத் துறைக்கு 2013-2014-ம் ஆண்டு ஒதுக்கிய நிதியான ரூ.1,160 கோடியில், ரூ.781.84 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதுஏன்?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஒரு அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்றால், கீழ் இருக்கும் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், அது பின்பற்றப்படுவது கிடையாது. இதனால், நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். கேரள முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- கேரள முதல்-மந்திரியுடன் பேசி இந்த பிரச்சினைக்கு பரிகாரம் காண்பது நல்ல விஷயம்தான். ஆனால், ஏற்கனவே பலமுறை பேசியாகிவிட்டது. தீர்வு ஏற்பட வேண்டும். இப்போது கேரள முதல்-மந்திரியாக இருப்பவர் சாந்தமானவர். அவரை நேரடியாக நீங்களே சந்தித்து பேசுங்கள். இரு மாநில முதல்-அமைச்சர்களும் நேரடியாக உட்கார்ந்து பேசினால் முடிவு கிடைக்கும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அவர் நல்ல முதல்-மந்திரி என்பதால் அவரை நாடியுள்ளோம். கேரள மாநில நீர்வள மந்திரி கிருஷ்ணன் குட்டி முழு அக்கறையோடு செயல்படுகிறார். எனவே, நல்ல முடிவு கிடைக்கும். முதற்கட்டமாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.

உறுப்பினர் தங்கம் தென்னரசு:- முன்பு இந்த துறை மானிய கோரிக்கை என்றால், சட்டசபையே அலங்கரிக்கப்பட்டிருக்கும். இன்று கலை இழந்து போய் உள்ளது. இந்த துறையும், இந்த அரசும் கலை இழந்த மாடமாக உள்ளது. இந்த அரசு மாறும் நாள் விரைவில் வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகத்தான் இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. அலங்காரம் எதுவும் செய்யவில்லை.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- அவர்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வருவதாக இன்ப கனவு காண்கிறார். ஆனால், அது பகல் கனவாக முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்