சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் செயற்குழு கூட்டம்
கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 28 (செவ்வாய்க்கிழமை) ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 9 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், தலைவர், பொருளாளர் தேர்தல், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை பற்றிய ஆலோசனை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.