சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., கடைசியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததற்கு தமிழக காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும். மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.