சென்னை,
டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டங்களை நிறுத்த கோரிய மனு மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்ட பிரச்னைகளை தீர்க்க குழு அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை மத்திய அரசு வரவேற்றுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.