தமிழக செய்திகள்

தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முககவசம், சேனிட்டைசர்களை வழங்க வேண்டும்; மு.க. ஸ்டாலின்

தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு முககவசம், சேனிட்டைசர்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, முறையே தங்களது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் திரு.தணிகாசலம் அவர்களிடம் 1,000 முககவசங்கள் மற்றும் 250 சேனிட்டைசர்களை சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியம் இன்று வழங்கினார்.

இதனை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முககவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றை திரட்டி வழங்கும் சேவையை தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும்.

#CoronaVirus தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT