தமிழக செய்திகள்

த.வெ.க. அசெம்பிள் ஆகாத என்ஜின் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

இதுவரையில் அசெம்பிள் ஆகாத என்ஜினுக்கு பதில் சொல்ல முடியாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. இதுவரையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை, கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு உள்ளது என கூறும் தேசிய ஜனநாய கூட்டணியினர் அரசியல் வரலாறு புரியாதவர்கள். அண்ணா காலத்தில் இருந்து கூட்டணி எப்படி அமைப்பது? கூட்டணியோடு எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது? என்பதில் எங்களுக்கென்று பாரம்பரியம் உள்ளது. தி.மு.க. எதையும் முறையாக செய்யும் கட்சி. முதலில் கூட்டணி பேசுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும்.

அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்படும். அதன்படி, முறையாக ஒவ்வொரு படியும் எடுத்துவைத்து வெற்றிக்கான இலக்கை அடைவோம். எதிர்கட்சிகள் அவசர கோலத்தில் தங்களுடைய பணிகளை செய்கிறார்கள். காங்கிரஸ்-த.வெ.க. இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது வதந்தி என நாங்கள் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி தலைவர்களே கூறிவிட்டனர்.

பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகம் என்பதே இல்லை. 7 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் இல்லாமல், ஜனநாயக படுகொலை செய்யும் ஆட்சிதான் பிரதமர் மோடி ஆட்சி. துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சிக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதை இதுவரையில் செய்யாமல் ஜனநாயகத்திற்கு எதிராக மோடி செயல்படுகிறார். த.வெ.க. அசெம்பிள் ஆகாத என்ஜின். ஒரு என்ஜினுக்கு பல பாகங்கள் உள்ளது. அதை அசெம்பிள் செய்தால்தான் முழு என்ஜின் ஆகும். இதுவரையில் அசெம்பிள் ஆகாத என்ஜினுக்கு பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.