தமிழக செய்திகள்

‘டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டபுள் இன்ஜின் நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே, மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் சொல்லும் டபுள் எஞ்சின் மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் டப்பா எஞ்சின் நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.