தமிழக செய்திகள்

சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர வேண்டும் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

குவைத்தில் தவிக்கும் தமிழர்களை சிறப்பு விமானங்களை மூலம் அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

குவைத் முகாமில் உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மற்றொருபுறம் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாக தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தமிழர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படாவிட்டால், மன உளைச்சல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடும்.

எனவே, இனியும் தாமதிக்காமல், சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.