தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் கணினி இயக்குபவர்கள் சுமக்கும் பணிச்சுமை கொஞ்சநஞ்சமல்ல. கணினி இயக்குபவர்களுக்கான பணிகள் மட்டும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கும் மேலாக கோப்புகளை தயாரித்தல், திட்டப்பணிகள் குறித்த அறிக்கைகள் தயாரித்தல், ஊதியப்பட்டியல் தயாரித்தல், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளின் வரவு செலவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட இளநிலை உதவியாளர்களுக்கான பணிகளையும் இவர்களே செய்ய வேண்டியிருக்கிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் விடுமுறை என்றாலும் இவர்கள் கட்டாயப்படுத்தி அலுவலகங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு நாள் முழுவதும் பணி செய்தாலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது தான் கொடுமை. ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது நிதியில் தினக்கூலி அடிப்படையில் கணினி இயக்குபவர்களாக பணியாற்றுபவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி இளநிலை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும்.

இதேநிலையில், 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றுபவர்களுக்கும், பிற பணிகளை செய்ய வெளியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 3,465 கணினி இயக்குபவர்களையும் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.