சென்னை,
இன்று நடைபெற்ற பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்க்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று பவினா சாதனைப் புரிந்துள்ளார். இதனால்,பவினாபென் படேலுக்கு பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் மக்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
"டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டெபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பவினா பென் படேலுக்கு வாழ்த்துகள்! உலக அரங்கில் சாதனைப் பயணமும், பதக்கக் குவிப்பும் தொடரட்டும்.
பவினா பென் படேலின் சாதனைக்கு அவரது தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான் காரணம். என்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற பவினா பென் படேலின் வார்த்தைகள் அவருக்கு மட்டுமல்ல சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரம்",என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.