தமிழக செய்திகள்

சென்னையில் பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற டிரைவர் கைது

அரும்பாக்கம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் காரை முன்பதிவு செய்தார்.

சென்னை,

டெல்லியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து அரும்பாக்கம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் காரை முன்பதிவு செய்தார்.

அத்துமீறல்

அந்த பெண். காரில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் அரும்பாக்கம் செல்லாமல் மதுரவாயல் மேம்பாலம் அருகே காரை நிறுத்தி, அந்த பெண்ணை மிரட்டி, அவரது பர்சில் இருந்த பணத்தை பறித்ததுடன், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். உடனே டிரைவர் அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு, அங்கிருந்து காரில் தப்பிச்சென்றார்.

வழக்குப்பதிவு

பின்னர் அந்த பெண் தனது நண்பரின் உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். இதுகுறித்து வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கோபிநாத் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.