மதுரை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரை மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா கடந்த ஜூன் மாதம் அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இதில் கடுமையாக தாக்கப்பட்டதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
சி.பி.ஐ. விசாரித்துவரும் இந்த கொலை வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி கண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய் யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில் இந்த 4 பேரையும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகும்படி 5 உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. அதனை கோர்ட்டு விசாரித்து, டி.எஸ்.பி. உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகும் படி உத்தரவிட்டது. ஆனாால் நேற்று முன்தினம் டி.எஸ்.பி.யை தவிர மற்ற 3 பேரும் நேரில் ஆஜரானார்கள். இதனால் டி.எஸ்.பி. சண்முகசுந்த ரத்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி செல்வபாண்டி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜரானார்கள். டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.