சென்னை,
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதற்காக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 9.50 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அவரை சட்ட சபை கூட்ட அரங்கத்திற்கு அழைத்து வந்தனர்.
சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு காலை 9.59 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடி வந்தார். சரியாக காலை 10 மணி அளவில் சபாநாயகர் இருக்கைக்கு அவர் வந்தார். அவருக்கு வலதுபுறத்தில் சபாநாயகர் ப.தனபாலுக்கும், இடதுபுறத்தில் கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டிலுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. அனைவரும் இருக்கைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.