சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. பொதுவாகவே தலைநகரை குறிவைத்து தாக்கும் மழை இந்த முறையும் தனது வலிமையை உணரச் செய்து இருக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து, சென்னை வெள்ளக்காடாய் போனது.
சென்னையில் பெய்த பெருமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை உடைத்துப்போட்டுள்ளது. நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியம், தீயணைப்பு-மீட்புத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னையில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. மீட்பு பணிக்கு தேவையான அதிநவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
அதன்படி,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மணலி,தாம்பரம்,பெரும்புலிபாக்கதிற்கு தலா ஒரு குழு என பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.