திருவாரூர்,
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு, ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. இதனால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 4 நாட்களுக்கும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்நிலையில், கொரோனா எதிரொலியாக திருவாரூர் மற்றும் கடலூரில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறும்பொழுது, கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதனால், நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில், மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளார்.
இதேபோன்று, கொரோனா எதிரொலியாக திருவாரூரில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.