சேலம்,
இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக ஆண்டு தோறும் ஜனவரி 25-ம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கபடுகிறது.
இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், " இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப நம் அன்னை தமிழின் சுயமரியாதை காக்க,வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்து, தாய் தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர் தியாகிகளுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.