சென்னை,
அதிமுக-வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தது. தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
எனினும், ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க தோல்விக்கு பிறகு மதுசூதனுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைக்கப்பட்டனர். தற்போது மீண்டும் அந்த மோதல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக அவைத் தலைவரும், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான மதுசூதனன், சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். இதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடனும் ஆலோசனை நடத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சந்தித்தார். இதனால் அதிமுக-வில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.