சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அறத்தையும் அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயத்தை வென்றால் மெய்ப்பொருள் அறியலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர், அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறிகளை தவறாது பின்பற்றி, தனது போதனைகளுக்கு தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக விளங்கும்படி செய்தவர்.
இந்த இனிய நாளில், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்ற பகவான் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் ஆகியோரும் மகாவீர் ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.