சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கழகக் கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.