சென்னை,
சென்னை கிண்டியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமைச்சரவை விரிவாக்கம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும். அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள்; நல்ல செய்தி வரும் என நினைக்கிறோம்.
அன்பான குடும்பம்போல அமைச்சரவை இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் விரும்புகிறார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகளின் கொள்கை முடிவுகளை நாங்கள் மதிப்போம். சமூகநீதி அடிப்படையில் இயங்கும் தலைவர்கள், கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.
மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்ததால் அதிமுகவின் ஒரு தரப்பினர் எங்களுக்கு ஆதரவு தந்தனர். எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்கள் உரிமை; அவர்களை சி.வி.சண்முகம் வழிநடத்துவார். சட்ட சிக்கல் வந்தால் சி.வி.சண்முகம் சந்திப்பார்; அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம்.
தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்க்க நினைத்ததை தற்கொலைக்கு சமம் என அதிமுகவினர் கருதினர். பாஜகவுடன் அதிமுக சேர்ந்தது மிகப்பெரிய அதிருப்தி என அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுக்கு ஆதரவளிக்க முயற்சித்தது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து குதிரை பேர அரசியலை உருவாக்கினர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா? என்ற கேள்விக்கு “யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமைச்சர் பதவிக்காக அவர்கள் எங்களிடம் வரவில்லை” என கூறினார்.