சென்னை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் மற்றும் மாநில அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு என்பது அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் பிரச்சார இரைச்சலில் உயிரிழந்தோர் ஓலம் அடங்கி விடக்கூடாது என்றும் இது குறித்து உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.