சென்னை,
தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. மேலும், தேர்தல் விதிகளை மீற வகை செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சில இடங்களில் சமூக விரோதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவும், வாக்குப்பதிவு நாளன்றும் வாக்காளர்களை மிரட்டிச் செல்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தரப்பட்டுள்ளது.
எனவே, எந்தவொரு இடத்திலும் வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு 72 மணி நேரம் முன்பிருந்து (அதாவது ஏப்ரல் 3-ந் தேதியில் இருந்து) தேர்தல் நாளான 6-ந் தேதி வரை மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் செல்ல தடை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவை தேர்தல் தொடர்புடைய அனைவரும், குறிப்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.