சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள் தங்கு தடையின்றி நடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 63 ஆயிரத்து 633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பு கடித்த 19 ஆயிரத்து 947 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4 ஆயிரத்து 432 நபர்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சைகள் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 615 நபர்களுக்கு அவசரகால சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.