லால்குடி:
லால்குடியை அடுத்த திருமணமேடு புதிய தெருவை சேர்ந்தவர் ஜோயல் பிரான்சீஸ்(வயது 35). தனியார் நிறுவன ஊழியரான இவர் திருச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கீழ வாளாடி அருகே வந்தபோது அரியலூரில் இருந்து திருச்சி சென்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஜோயல் பிரான்சீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் அங்கு வந்து ஜோயல் பிரான்சீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.